சென்னை, ஜூன் 25, 2025: சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நேற்று மேற்கொண்ட சோதனைகளின் போது ₹18.2 கோடி மதிப்பிலான 92.1 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தது.
“குளியலறை மற்றும் சுகாதார சாதனங்கள்” என்ற பெயரில் துபாயிலிருந்து இந்தியாவிற்கு வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வருவாய் புலனாய்வு இயக்குநரக சென்னை மண்டல பிரிவு அதிகாரிகள் இவற்றை பறிமுதல் செய்தனர்.
வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் கொள்கலனில் உள்ள பொருட்களின் விவரங்கள் தவறாக அறிவிக்கப்பட்டிருந்தன என்பதும், மாறாக ‘மான்செஸ்டர் யுனைடெட் கிங்டம்’, ‘மான்செஸ்டர் யுனைடெட் கிங்டம் ஸ்பெஷல் எடிஷன்’ மற்றும் ‘மேக் ஐஸ் சூப்பர் ஸ்லிம்ஸ் கூல் ப்ளாஸ்ட்’ போன்ற பல்வேறு வணிக முத்திரைகளுடன் 92.1 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த சிகரெட்டுகளின் மதிப்பு ₹.18.2 கோடி (உத்தேசமாக). மேலும், சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரங்கள் மற்றும் விற்பனை ஒழுங்குமுறை தடைச்சட்டம்) தடுப்புச் சட்டத்தின் படி பேக்கேஜிங் முறைகள் மற்றும் முத்திரைகளில் சட்டப்பூர்வ சுகாதார எச்சரிக்கை இல்லாததும் இதில் அடங்கும். 1962-ம் ஆண்டு சுங்கவரிச் சட்ட விதிகளின் கீழ் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும், சென்னையில் உள்ள துறைமுகங்கள் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மொத்தம் 4.4 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளையும், போலி சிகரெட்டுகளையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு ₹.79.67 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.